Tuesday, January 16, 2007

பொங்கல்

பொங்கல் திருநாளை ஒட்டுமொத்த தமிழர்களின் கலாச்சார திருநாளாக 'தமிழ்கிறிஸ்தவக் கத்தோலிக்கர்கள் தமிழர் என்ற அடிப்படையில் கொண்டாடுகின்றனர்".

மேலும்,"கிறிஸ்தவக் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை; "தமிழர்களாகிய முஸ்லிம்கள் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை?" என்று கேட்கிறர்கள்.

பொங்கல் குறித்த முஸ்லிம்களின் கண்ணோட்டம் தெளிவாக உள்ளது.இறைவனைக்கு நன்றி செலுத்துவதையும் படைப்புகளுக்கு நன்றி செலுத்துவதையும் இஸ்லாம் தெளிவாகச் சொல்லியுள்ளது:

* வணங்குவதற்குரியவன் படைத்த இறைவனேயன்றி படைப்புகள் அல்ல.

* மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன்,இறைவனுக்கு நன்றி செலுத்தியன் ஆக மாட்டான்.

* உழைப்பவரின் வியர்வை நிலத்தில் விழும் முன் உழைப்பிற்கான கூலியைக் கொடுத்து விடச்சொல்லி உடல் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது இஸ்லாம்.

*முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான ஜகாத் பொருளில் கஷ்டப்பட்டு நீர் பாய்ச்சி, உழுது விளைந்த விளைபொருளுக்கு 5% சதவீதமும், இயற்கையாக விளைந்த பொருள்களுக்கு 10% சதவீதமும் ஜகாத் என உடலுழைப்பைக் போற்றுகிறது இஸ்லாம்.

ஒருபக்கம் நன்றி செலுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம் அதே நாளில், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப் படுத்துகிறோம் இதை வீரம் என்றும் சொல்கிறோம்! மாடுகளால் மனிதன் அடையும் கொடுமையை 'விழுப்புண்' என்று ஏமாற்றுகிறோம். நாளெல்லாம் நமக்காக உழைத்த தொழிலாளியை விலங்குகளுடன் மோத விட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கிறோம். இதுவா உழைப்பவருக்கும் அதற்கு உதவிய விலங்குகளுக்கும் செய்யும் நன்றி? இஸ்லாம் இவ்விசயத்திலும் தெளிவாக இருக்கிறது . விலங்குகளைக் கொடுமை படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில் முஹம்மது நபி தன் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். நபிகளார் வரும் பாதையில் இருந்த புற்றிலிருந்து எறும்புகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு , அவ்வெறும்புகளால் நபிகளாருக்கு சிரமம் ஏற்பட்டு விடும் என்று கருதி, ஒரு தோழர் எறும்பு புற்றுக்கு தீ வைத்தார் . இதனைக் கண்ட முஹம்மது நபி (ஸல்...) உயிர்களை தீயிட்டு எரிப்பதைக் வன்மையாகக் கண்டித்தார்கள்.

அபூஹுரைரா ரலி... அவர்கள் அறிவிக்கிறார்கள்: "தாகித்திருந்த ஒரு நாயின் தாகத்தை தீர்ப்பதற்காக கிணற்றில் இறங்கி நீர் கொண்டுவந்து நாயின் தாகத்தைத் தீர்த்த மனிதனின் செயலை அல்லாஹ் நன்றியுடன் பொருந்திக் கொண்டு அவனின் பாவங்களை மன்னித்து விட்டான் " என்று பெருமானார் சொன்னபோது, "இறைத்தூதரே, விலங்குகளுக்கு உதவினாலும் அல்லாஹ்விடத்தில் வெகுமதி கிடைக்குமா?" என்று வினவியபோது, "ஆம்! விலங்குகளுக்கு உதவி செய்தாலும் வெகுமதியுண்டு" என்றார்கள்.இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பூனையை வீட்டிலடைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுக் கொன்ற பெண் நரகில் வேதனை செய்யப்படுவதாகச் சொன்னார்கள் (புகாரி).

உழைப்பவரின் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது,வெறும் வாய் வார்த்தைகளால் அல்ல. அவருக்குரிய சரியானக் கூலியைக் கொடுப்பதே ஆகும். காளைகளை வதைப்பதும் மிருகங்களிடம் 'விழுப்புண்'கள் பெறுவதும் வீரமல்ல!

உழைப்பவரின் மேன்மை உயர படைத்தவன் அருளட்டும். சக தமிழ்ச் சகோதரர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.

No comments: